ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

பஞ்சமி தாய்

பஞ்சமி தாய்

வாராகி வழிபாடு

பஞ்சமி வழிபாடு

சப்த கன்னிகள் என்னும் எழுவரில் ஐந்தாமானவள் வராஹி.

வாராகி வழிபாடு வீட்டில் செய்ய ஒரு தனி இடம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

எந்த இடத்தில், எந்த நேரத்தில் செய்கி றோமோ அதே இடத்தில் தான் தினசரி செய்ய வேண்டும்.

வழிபாட்டிற்கு அன்னையின் படம், அல்லது விளக்கு ஜோதி வடிவாகவே வழிபாடு செய்யலாம், நாம் வடக்கு, மேற்கு நோக்கி அமரலாம். அன்னை வராகிக்கு பிடித்தமான நிறம் பச்சை! பச்சை நிறத் துண்டின் மீது அமர்ந்து இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி(கிழக்கு நோக்கி ஏற்றினால் வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;வடக்கு நோக்கி ஏற்றினால் கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்..

பூஜை அறையில் அன்னை படத்தை வைப்பதை காட்டிலும் தனி அறையில் பூஜை செய்வதுதான் சிறப்பு.

அன்னைக்கு அருகில் ஒரு விநாயகர் சிலை, அல்லது படத்தை வசதிக்கு ஏற்றார்போல் வைத்து கொள்வது நலம்.

தினசரி பூஜை செய்யும் இடத்தில் பன்னீரில் மஞ்சள் தூள் கலந்து 5 ஏலக்காய் நுணுக்கி அதில் போட்டு அந்த தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும்.

வெள்ளிக்கிழமை, பஞ்சமி தோறும் மாவிலை தோரணம் கட்ட வேண்டும்.

பூஜை செய்யும் போது நீலம் மற்றும் சிகப்பு நிற ஆடையை பயன்படுத்துவது நலம்.

தர்பை பாய், அல்லது கம்பளி போர்வை ஆசனத்திற்கு பயன்படுத்த நலம்.

சுத்தமான மஞ்சள், குங்குமம் பூஜைக்கு பயன்படுத்த வேண்டும்.

சாம்பிராணி புகையில், வெண்கடுகு, வெள்ளை குங்கிலியம் சேர்த்து போடுவது சிறப்பு.

வாராகி அன்னை படம், விநாயகர் படம் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமைக்க வேண்டும்.

பூஜை முறை :

பூஜைக்கு தேவையான பொருட்கள், நைவேத்தியம் எல்லாம் சேகரித்து வைத்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.

முதலில் குருவை- மானசீகமாக வழிபாடு செய்து “குருவடி சரணம் திருவடிசரணம்” என்று 9 முறை கூறவும்.

பின்பு விநாயகருக்கு அருகம்புல் கொண்டு 21 முறை விநாயகாய நம என கூறி அர்ச்சிக்க வேண்டும்.

விநாயகருக்கு தீபாராதனை காண்பித்து நைவேத்தியம் சமர்ப்பிக்க வேண்டும்.

வாராகி அன்னையை குங்கும அர்ச்சனை

வாராகி அன்னையை செம்பருத்தி, செவ்வரளி, மல்லி, துளசி, வில்லம், நீலசங்கு பூ மூன்றையும் கலந்து “வாராகி மூல மந்திரம்

“ஓம் க்லீம் வராஹமுகி ஹ்ரீம்
ஸித்தி ஸ்வரூபிணி ஸ்ரீம் தன
வசங்கரி தனம் வர்ஷய
வர்ஷய ஸ்வாஹ:” 1008 உரு வீதம் 26 நாட்கள் ஜெபம்

மற்றும் “வாராகி மாலை” பாடி அர்ச்சனை செய்ய வேண்டும்.

1 வசீகரணம் (த்யானம்)

இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும்
குருமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி
மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே

2 காட்சி (யந்த்ர ஆவாஹனம்)

தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்கு வட்டத்து
ஈராறிதழ் இட்டு ரீங்காரம் உள்ளிட் டதுநடுவே
ஆராதனைசெய்து அருச்சித்துப் பூஜித்தடி பணிந்தால்
வாராதிராள் அல்ல வோலை ஞான வாராஹியுமே

3 பகை தடுப்பு (பிரதாபம்)

மெய்ச்சிறந்தாற் பணியார் மனம் காயம் மிகவெகுண்டு
கைச்சிரத் தேந்திப் புலால்நிணம் நாறக் கடித்துதறி
வச்சிரத் தந்த முகப் பணியாற் குத்தி வாய்கடித்துப்
பச்சிரத் தம்குடிப்பாளே வாராஹி பகைஞரையே

4 மயக்கு (தண்டினி த்யானம்)

படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்புத் தடிகொண்டு பேய்கள் அவர்குருதி
குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில்
நடிக்கும் வாராஹி பதினா லுலகம் நடுங்கிடவே

5 வெற்றி ஈர்ப்பு (சத்ரு ஸம்ஹாரம்)

நடுங்கா வகைஅன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்
கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித் திட்
டிடும்பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகம்இடும்
தொடும்கார் மனோன்மணி வாராஹி நீலி தொழில் இதுவே

6 உச்சாடனம் (ரோகஹரம்)

வேய்க்குலம் அன்னதிண்தோளாள் வாராஹிதன் மெய்யன்பரை
நோய்க்குலம் என்ன இடும்பை செய்வார்தலை நொய்தழித்துப்
பேய்க்குலம் உண்ணப் பலிகொண்டு போட்டுப் பிணக்குடரை
நாய்க்குலம் கௌவக் கொடுப்பாள் வாராஹிஎன் நாரணியே

7 எதிர்ப்புக் கட்டு (சத்ருஹரம்)

நாசப்படுவர் நடுங்கப்படுவர் நமன் கயிற்றால்
வீசப்படுவர் வினையும் படுவர்இம் மேதினியோர்
ஏசப்படுவர் இழுக்கும் படுவர்என ஏழை நெஞ்சே
வாசப் புதுமலர்த் தேனாள் வாராஹியை வாழ்த்திலரே

8 பெரு வச்யம் (திரிகால ஞானம்)

வாலை புவனை திரிபுரை மூன்றும் இவ் வையகத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆகஎக் காலத்துமே
ஆலயம் எய்தி வாராஹிதன் பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே

9 பகைமுடிப்பு (வித்வேஷணம்)

வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல்முன் வானவர்க்காச்
சிரித்துப் புரம் எரித்தோன் வாம பாகத்துத் தேவி எங்கள்
கருத்திற் பயிலும் வாராஹிஎன் பஞ்சமி கண்சிவந்தாற்
பருத்தி பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே

10 வாக்கு வெற்றி (சத்ரு மாரணம்)

பாப்பட்ட செந்தமிழ்ப் பாவாணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
பூப்பட்டதும் பொறிபட்டதோ ? நின்னை யேபுகழ்ந்து
கூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ ? அண்ட கோளமட்டும்
தீப்பட்ட தோ ? பட்டதோ நிந்தை யாளர்தெரு எங்குமே

11 தேவி வருகை (பூத பந்தனம்)

எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம்பகைஞர்
அங்கம் பிளந்திட விண்மன் கிழிந்திட ஆர்த்தெழுந்து
பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப் போகவிட்டுச்
சிங்கத்தின் மீது வருவாள் வாராஹி சிவசக்தியே

12 ஆத்ம பூஜை (மஹாமாரி பூஜனம்)

சக்தி கவுரி மஹமாயி ஆயிஎன் சத்துருவைக்
குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவிநின்றே
இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
நித்தம் நடித்து வருவாள் வாராஹிஎன் நெஞ்சகத்தே

13 தேவி தாபனம் (பில்லி மாரணம்)

நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்றவன் நிர்க்குணத்தி
நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு
வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்
கொஞ்சி நடந்து வருவாள் வாராஹி குலதெய்வமே

14 மந்திர பூஜை (முனிமாரணம்)

மதுமாம்ஸம்தனைத் தின்பாள் இவள்என்று மாமறையோர்
அதுவே உதாஸினம் செய்திடுவார் அந்த அற்பர்கள்தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து
விதிர் நாளில் வெட்டி எறிவாள் வாராஹிஎன் மெய்த்தெய்வமே

15 வாராஹி அமர்தல் (மூர்த்தி த்யானம்)

ஐயும் கிலியும் எனத் தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்) மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண்எதிரே
வையம் துதிக்க வருவாள் வாராஹி மலர்க்கொடியே

16 வரம் பொழிதல் (எதிரி மாரணம்)

தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்
மாளும் படிக்கு வரம்தருவாய்: உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும்
வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே

17 வாழ்த்துதல் (உலக மாரணம்)

வருந்துணை என்று வாராஹி என்றன்னையை வாழ்த்திநிதம்
பொருந்தும் தகைமையைப் பூணா தவர் புலால்உடலைப்
பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்ய பிசாசுகளும்
விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர்கண்டீர் உடல் வேறுபட்டே

18 நன்னீர் வழங்கல் (ஏவர் பந்தனம்)

வேறாக்கும் நெஞ்சும் வினையும் வெவ்வேறு வெகுண்டுடலம்
கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதிபொங்கச்
சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்
மாறாக்கும் நேமிப் படையாள் தலைவணங்கா தவர்க்கே

19 புனித நீர் அருந்துதல் (துஷ்ட பந்தனம்)

பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
ஓடவிட் டேகை உலக்கைகொண் டெற்றி உதிரம் எல்லாம்
கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள்
ஆடகக் கும்ப இணைக் கொங்கயாள் எங்கள் அம்பிகையே

20 மலர் வழிபாடு (கர்ம வாஸன நாசனம்)

தாமக் குழலும் குழையும் பொன் ஓலையும் தாமரைப்பூஞ்
சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு ஜெகம்அதனில்
வாமக் கரள களத்தம்மை ஆதி வாராஹிவந்து
தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே

21 தேவி சன்னிதானம் (கர்ம மூலபந்தனம்)

ஆராகிலும் நமக்கேவினை செய்யின் அவர்உடலும்
கூராகும் வாளுக் கிரைஇடுவாள் கொன்றை வேணிஅரன்
சீரார் மகுடத் தடிஇணை சேர்க்கும் திரிபுரையாள்
வாராஹி வந்து குடிஇருந்தாள் என்னை வாழ்விக்கவே

22 தேவி துதி மாலை (ஜன்ம துக்க நாசனம்)

தரிப்பாள் கலப்பை என்அம்மை வாராஹிஎன் சத்துருவைப்
பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரிந் ததலை
நெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை
உரிப்பாள் படுக்க விரிப்பாள்சுக்காக உலர்த்துவளே

23 புகழ்சொற் பாமாலை (மௌனானந்த யோகம்)

ஊரா கிலும்உடன் நாடா கிலும்அவர்க் குற்றவரோடு
யாரா கிலும்நமக் காற்றுவரோ ? அடல் ஆழி உண்டு
காரார் கருத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு
வாராஹி என்னும்மெய்ச் சண்டப் ப்ரசண்ட வடிவிஉண்டே

24 படைக்கள வாழ்த்து (பதஞான யோகம்)

உலக்கை கலப்பை ஓளிவிடு வாள்கட காழிசங்கம்
வலக்கை இடக்கையில் வைத்த வாராஹிஎன் மாற்றலர்கள்
இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும்
விலக்கவல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே

25 பதமலர் வாழ்த்து (பிரதிபந்த நாசன யோகம்)

தஞ்சம்உன் பாதம் சரணா கதிஎன்று சார்ந்தவர்மேல்
வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை
நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்(டு)
அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே

26 படை நேமி வாழ்த்து (சிந்தனானந்த யோகம்)

அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்
கொலைபட் டுலகம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்
தலைகெட்டவயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர்கண்டீர்
நிலைபெற்ற நேமிப் படையாள் தனைநினை யாதவரே

27 அடியார் வாழ்த்து (அர்ச்சனானந்த யோகம்)

சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம்துதித்தே
அந்தி பகல்உன்னை அர்ச்சித்தபேரை அசிங்கியமாய்
நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப்
புந்தி மகிழ்ந்து வருவாய் வாராஹிநற் பொற்கொடியே

28 திருப்படை வந்தம் (அம்ருதானந்த யோகம்)

பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற
மருப்புக்கு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் என(து)
இருப்புக் கடிய மனதிற் குடிகொண்டு எதிர்த்தவரை
நெருப்புக்கு வால்எனக் கொல்வாய் வாராஹிஎன் நிர்க்குணியே

29 பாதமலர் வந்தனம் (கைவல்யானந்த யோகம்)

தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து
நீறிட் டவர்க்கு வினைவரு மோ ? நின் அடியவர்பால்
மாரிட் டவர்தமை வாள்ஆயுதம் கொண்டு வாட்டிஇரு
கூறிட் டெறிய வருவாய் வாராஹி குலதெய்வமே

30 ஸித்தி வந்தனம் (ஆனந்த யோகம்)

நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்
அரிஅயன் போற்றும் அபிராமி தன்அடி யார்க்கு முன்னே
ஸரியாக நின்று தருக்கம்செய் மூடர் தலையை வெட்டி
எரியாய் எரித்து விடுவாள் வாராஹி எனும் தெய்வமே

31 நவகோண வந்தனம் ( நித்யானந்த யோகம்)

வீற்றிருப்பாள்நவ கோணத்திலேநம்மை வேண்டும் என்று
காத்திருப்பாள்கலி வந்தணுகாமல்என் கண்கலக்கம்
பார்த்திருப்பாள் அல்லள் எங்கேஎன்றங்குச பாசம் கையில்
கோத்திருப்பாள் இவளே என்னை ஆளும் குலதெய்வமே

32 நிறைமங்கலம் ( சிவஞான யோகம்)

சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்
தவம்ஆரும் மெய்யன்பர்க் கேஇடர் சூழும் தரியலரை
அவமானம் செய்யக் கணங்களை ஏவும்அகோரி இங்கு
நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுரை நாயகியே

பயன்:-

இதை பாடினால் மும்மூர்த்தி அருள் கிடைக்கும்.

இப்பாடல்களை தினசரி பாடி வழிபடுவோர்களுக்கு எல்லா வகையான பலன்களும் அளவற்ற செல்வமும் திரண்டு கிடக்கும்.

தயிர்சாதம் நைவேத்தியம் வெள்ளை மொச்சை பருப்பை வேக வைத்து தேன், மற்றும் நெய்யுடன் கலந்து வராஹிக்கு படைத்து, பூஜை செய்ய வேண்டும்.

இதன் பலன்: தன வசியம், தொழில் விருத்தி, மற்றும் வியாபாரம் செழிக்கும். எதிரிகள் தொல்லை ஒழியும். எதிர்ப்புகள் விலகும். தடைப்பட்ட காரியங்கள் இனிதே நடந்தேறும். வழக்கு முதலான காரியங்களில் வெற்றி கிடைக்கும்

பூஜையில் அமர்ந்த பின் எழக் கூடாது.

அர்ச்சனை முடித்த பிறகு அன்னைக்கு பிடித்த நைவேத்தியம் வைத்து தீபஆராதனை காண்பித்து வாராகி தேவி பாதம் பணிந்தேன் என கூறி பணிந்து கீழே விழுந்து வணங்க வேண்டும்.

தேய்பிறை பஞ்சமி திதி இருக்கும் நாளில் இரவு 9 மணி முதல் 10 மணி வரை பஞ்சமி, அம்மாவாசை அன்று, ஒரு ஐந்து நபருக்கு உணவளித்தால் நலம். ஐந்து பஞ்சமி அல்லது ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் தேங்காய் மூடியில் நெய் விளக்கு ஏற்றி வாராஹியை வழிபட, கோரிய பலன் கிட்டுவது உறுதி. கீழே விழுந்து வணங்கிய பிறகு, சங்கு நாதம் ஒலிக்க வேண்டும், அல்லது மணி இசைத்து மீண்டும் கீழே விழுந்து வணங்க வேண்டும்.

பின் நைவேத்தியம் பகிர்ந்து கொடுத்து நாமும் உண்ணலாம்.

கண்டிப்பாக நேரம் தவறக்கூடாது, ஆரம்ப நாளில் எந்த நாளில் நேரத்தில் செய்தீர்களோ அதே நேரத்தில்தான் செய்ய வேண்டும். ஒருவேளை வெளியூர் சென்றால் ஒரு அம்மன் ஆலயம் சென்று வழிபாடு செய்து மாற்றிக் கொள்ளலாம். இந்த எளிமையான வழி பாட்டை அனைவரும் செய்து அன்னையின் அருளை பெறலாம்.

அன்னையின் கோடிக்கணக்கான மந்திரமும், இந்த வாராகி மாலை ஒன்றுக்கு சமம். ஆக இதே ‘பாமாலை’ சக்தி எண்ணிலடங்கா இது ஒன்றே பூஜைக்கு போதுமானது. வராஹிதேவியை வணங்குங்கள். வளம் பெறுங்கள். நலம் பெறுங்கள். மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megalahomechannel@gmail.comக்கு அனுப்பவும். நன்றி, R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: